சீன ஆதரவு இணையதள நிறுவனத்தின் அதிகாரி அப்ரூவராக மாற அனுமதி
சீன ஆதரவு இணையதள நிறுவனத்தின் அதிகாரி அப்ரூவராக மாற அனுமதி
ADDED : ஜன 10, 2024 12:42 AM
புதுடில்லி, சீனாவுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், 'நியூஸ் கிளிக்' இணைய செய்தி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்ரவர்த்தி, 'அப்ரூவராக' மாறுவதற்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், நியூஸ் கிளிக் என்ற இணைய செய்தி நிறுவனம், நம் அண்டை நாடான சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்துள்ளது.
மேலும், நம் நாட்டுக்கு எதிராகவும் அதில் செய்திகள் வெளியாகின. இதற்காக வெளிநாட்டில் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புதுடில்லி போலீசின் சிறப்புப் பிரிவு விசாரித்தது.
கடந்த அக்., 3ல் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உட்பட, 88 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த வழக்கில், நியூஸ் கிளிக் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா, மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது, மிகவும் கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கேட்டு, அமித் சக்கரவர்த்தி, புதுடில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து விசாரித்த, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹர்தீப் கவுர், மனுவை ஏற்றுக் கொண்டதாக நேற்று அறிவித்தார். அமித் சக்கரவர்த்திக்கு மன்னிப்பு அளிப்பதாகவும், அப்ரூவராக மாறவும், நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு முழு தகவல்களும் தெரியும் என்றும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அமித் சக்கரவர்த்தி ஏற்கனவே கூறிஉள்ளார்.

