ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு
ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு
ADDED : மார் 13, 2025 04:47 PM

புதுடில்லி: ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் ஸ்டார்லிங்க் நிறுவனம் கூட்டு சேர பிரதமர் மோடி தான் காரணம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
செயற்கைக்கோள் வழி அதிவேக இணையதள சேவை வழங்க ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இரண்டு நிறுவனங்களும், ஸ்டார்லிங்க்கின் இந்திய வருகையை எதிர்த்தன. இதற்கு வழக்கமான அலைக்கற்றை ஏலம் போல அல்லாமல், நிர்வாக ரீதியான ஒப்புதலை பெற, மத்திய அரசிடம் எலான் மஸ்க் விண்ணப்பித்ததே காரணம்.
எலான் மஸ்க் வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் அமைதியை வாங்க விரும்பிய பிரதமர் மோடி, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் உடன் ஒப்பந்தம் போட ஏற்பாடு செய்தார் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தியா வரியை குறைத்து விட்டதாக டிரம்ப் தினமும் கூறி வருகிறார். இந்தியா எதற்கு ஒப்புக் கொண்டது. எதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. எலான் மஸ்க் மகிழ்ச்சியாக இருந்தால், அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியாக இருப்பார் என பிரதமர் நம்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.