UPDATED : ஜூன் 07, 2025 11:58 PM
ADDED : ஜூன் 07, 2025 11:41 PM

புதுடில்லி : நம் நாட்டில், 2011- - 12ல், 27.1 சதவீதமாக இருந்த தீவிர வறுமை விகிதம், 2022 -- 23ல், 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
வறுமைக் கோடு தொடர்பாக சர்வதேச அளவில் ஆராய்ச்சி செய்து, உலக வங்கி அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022 - 23ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் விபரங்களை, 'வறுமை மற்றும் சமபங்கு சுருக்கம்' என்ற பெயரில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
மக்களின் வாங்கும் சக்தியை அடிப்படையாக வைத்தே, வறுமைக்கோட்டின் அளவு வரையறுக்கப்படுகிறது. உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி, மக்களின் தினசரி நுகர்வானது அமெரிக்க டாலர் மதிப்பில் மூன்றுக்கும் குறைவாக, இந்திய மதிப்பில் 250 ரூபாய்க்கும் குறைவாக இருப்பதை வைத்து வறுமையில் இருப்போர் கணக்கிடப்படுகின்றனர்.
இந்த புதிய அளவுகோல், 2021 முதல் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி, 2011 - 12ல் இந்தியாவில் 344.47 மில்லியன், அதாவது 34.47 கோடி மக்கள் வறுமையில் இருந்தனர்.
இந்த எண்ணிக்கை, 2022 - 23ல் 7.5 கோடியாக குறைந்தது; 27.1 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் வாயிலாக, கடந்த 11 ஆண்டுகளில், 26.9 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளில், கிராமப்புறங்களில் கடும் வறுமை 18.4 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 10.7 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
எம்.பி.ஐ., எனப்படும் பல்திறன் வறுமை குறியீடு, 2005 - 06ல் 53.8 சதவீதமாக இருந்த நிலையில், 2022 - 23ல் 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2011 - 12ல், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீவிர வறுமை 65 சதவீதமாக இருந்தது.
இது, 2022 - 23ல் 54 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த வறுமை குறைவுக்கு இந்த ஐந்து மாநிலங்களும் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில், 27 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளே காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி, அரசு திட்டங்கள், கிராம - நகர வறுமை இடைவெளி குறைவு போன்றவை காரணமாக கூறப்படுகின்றன. கடந்த 2022 - 23ல் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.6 சதவீதமாக இருந்தது. 2023 - 24ல் 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், சமையல் எரிவாயு திட்டம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் போன்றவை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளன.
மத்திய அரசு சார்பில் இலவச அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வினியோகமும் வறுமை ஒழிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.