நடிகர்கள் பார்ட்டி நடத்திய வழக்கு 'பப்' உரிமம் 25 நாட்கள் ரத்து
நடிகர்கள் பார்ட்டி நடத்திய வழக்கு 'பப்' உரிமம் 25 நாட்கள் ரத்து
ADDED : ஜன 17, 2024 02:00 AM
பெங்களூரு : நடிகர்கள் இரவு முழுவதும் பார்ட்டி நடத்திய வழக்கில், பப் உரிமத்தை 25 நாட்களுக்கு ரத்து செய்து, பெங்களூரு கலெக்டர் தயானந்தா உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு சுப்பிரமணியநகரில் உள்ள ஜெட்லக் 'பப்'பில், கடந்த 3ம் தேதி இரவு கன்னட நடிகர் தர்ஷன் நடிப்பில் வெளியான, காட்டேரா திரைப்படத்தின் வெற்றி கொண்டாடப்பட்டது. இரவு 1:00 மணிக்கு 'பப்'பை மூட வேண்டும் என்ற விதியை மீறி, படக்குழுவினர் இரவு முழுவதும் பார்ட்டி நடத்தினர். இதுதொடர்பாக 'பப்' உரிமையாளர் சசிரேகா மீது, சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணைக்கு நடிகர்கள் தர்ஷன், அபிஷேக் அம்பரீஷ், டாலி தனஞ்ஜெயா, சிக்கண்ணா, நினாசம் சதீஷ், இயக்குனர் தருண் சுதீர், இசையமைப்பாளர் ஹரிகிருஷ்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மல்லேஸ்வரம் உதவி போலீஸ் கமிஷனரும், போலீஸ் கமிஷனர் தயானந்தாவிடம் அறிக்கை தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில், விதிகளை மீறி செயல்பட்ட, ஜெட்லக் 'பப்' உரிமத்தை அடுத்த 25 நாட்களுக்கு, தற்காலிகமாக ரத்து செய்து, பெங்களூரு நகர கலெக்டர் தயானந்தா நேற்று உத்தரவு பிறப்பித்தார். இன்னும் இரண்டு முறை விதிகளை மீறினால், 'பப்' உரிமம் முழுவதும் ரத்து செய்யப்படும்.

