வளர்ச்சி் பணிகளுக்கு இடையூறு இக்பால் அன்சாரி மீது ரெட்டி புகார்
வளர்ச்சி் பணிகளுக்கு இடையூறு இக்பால் அன்சாரி மீது ரெட்டி புகார்
ADDED : ஜன 26, 2024 11:57 PM
கொப்பால் -“தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு, காங்., முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி இடையூறு செய்கிறார்,” என கங்காவதி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
கொப்பால், கங்காவதியில் நேற்று அவர் கூறியதாவது:
தொகுதி வளர்ச்சியை மனதில் கொண்டு, அரசு உத்தரவிட்டால், அதிகாரிகளை இடம் மாற்றினால், காங்., முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி, முட்டுக்கட்டை போடுகிறார்.
எனக்கு கிடைத்த தகவலின்படி, லோக்சபா தேர்தல் முடிந்த பின், இக்பால் அன்சாரியை, காங்., தலைவர்கள் குப்பை கூடையில் எறிவர். அதுவரை நான் பொறுமையாக இருக்க வேண்டும்.
தேர்தலில் தோற்றும் அவர் பாடம் கற்கவில்லை. அரசு மருத்துவமனையில் 'ஆரோக்கிய ரக்ஷா' கமிட்டி அமைத்து, எனக்கு நெருக்கமானவர்களை உறுப்பினர்களாக நியமித்தேன். ஆனால் மருத்துவ அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து, அந்த நியமனத்தை தடுத்தனர்.
சிறப்பாக பணியாற்றும் சில அதிகாரிகளை இடம் மாற்றியுள்ளனர். அரசின் நிதியுதவி திரும்பிச் செல்லும் வகையில், இக்பால் அன்சாரி நடந்து கொள்கிறார். இதன்பின் விளைவை அவர் சந்திக்க வேண்டி வரும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி, இந்தியர்களின் நுாற்றாண்டு கனவை நனவாக்குவதில், ஸ்ரீராம டிரஸ்ட்டினருக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்த பெருமை, பிரதமர் நரேந்திர மோடியை சாரும். அவர் மீண்டும் பிரதமராவார்.
நான் பா.ஜ.,வில் இணைவது குறித்து, கட்சி மேலிடம் என்னுடன் பேச்சு நடத்தினர். தேர்தல் கூட்டணி வைக்க, எனக்கு ஆர்வம் உள்ளது. பா.ஜ., என் தாய் கட்சியாகும். தேர்தல் கூட்டணி என்றால், அந்த கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும்.
பிரதமர் மோடி நாட்டின் கவுரவத்தை அதிகரிக்கிறார். அவரது தலைமையில் இந்தியா, உலகத்துக்கே குருவாக வேண்டும். எனவே மேலிடத்துடன் பேச்சு நடத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

