ADDED : ஜன 17, 2024 01:23 AM
பெங்களூரு : கோச்சிங் சென்டர்களை முறைப்படி பதிவு செய்வதை கட்டாயமாக்கி, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்ட சுற்றறிக்கை:
மாநிலத்தில் கட்டுப்பாடின்றி, கோச்சிங் சென்டர்கள் திறக்கப்படுகின்றன. அரசிடம் அனுமதி பெறாமல் செயல்படுகின்றன. இனி அரசுக்கு 25,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, கோச்சிங் சென்டர்களை பதிவு செய்து கொள்வது கட்டாயம்.
ஐ.பி.எஸ்., - ஐ.ஏ. எஸ்., - ஐ.எப்.எஸ்., - கே.ஏ.எஸ்., உட்பட, மற்ற பதவிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், கோச்சிங் சென்டர்களில் சேர்கின்றனர்.
பல கோச்சிங் சென்டர்கள் முறைகேடாக நடக்கின்றன. மாணவர்களிடம் மனம் போனபடி கட்டணம் வசூலிக்கின்றன. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கோச்சிங் சென்டர்கள், கல்லுாரி கல்வித் துறையில் 25,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்வது கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

