'தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளில் தலைமை நீதிபதியின் ஒப்புதல் அவசியம்' சுப்ரீம் கோர்ட் உத்தரவு
'தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளில் தலைமை நீதிபதியின் ஒப்புதல் அவசியம்' சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : பிப் 06, 2024 12:24 AM
புதுடில்லி,: 'வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலை, தனி நீதிபதி பெற வேண்டும். எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி தான் தீர்மானிப்பார்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006 - 11 வரையிலான தி.மு.க., ஆட்சிக் காலத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர்.
இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு தனித்தனி வழக்குகளை பதிவு செய்தது.
தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக 76.40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், ராமசந்திரன், அவரது மனைவி மீது 44.56 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம், அமைச்சர்கள் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது.
இந்த சீராய்வு மனுக்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து அமைச்சர்கள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தனி நீதிபதி, இது தொடர்பாக தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்றாரா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவில்லை.
ஆனால், வழக்கின் கோப்புகளை தலைமை நீதிபதி பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரஷாந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு முடிவை எடுப்பார் என நம்புகிறோம். இந்த வழக்குகளை தலைமை நீதிபதியே விசாரிக்கலாம் அல்லது வேறு அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிடலாம்.
அதேநேரத்தில், அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்.
அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்.
மேலும் இந்த உத்தரவை, தானாக முன்வந்து விசாரிக்கும் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மீது கருத்து தெரிவித்ததாகக் கருதக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.