ராமேஸ்வரம் கோயில் அர்ச்சகர்கள் நியமன பிரச்னை உயர்நீதிமன்றத்தை அணுக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ராமேஸ்வரம் கோயில் அர்ச்சகர்கள் நியமன பிரச்னை உயர்நீதிமன்றத்தை அணுக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : செப் 19, 2025 03:32 AM
'ராமேஸ்வரம் கோவிலில், அர்ச்சகர்கள் மற்றும் மணியம் நியமனம் செய்ய வேண்டும்' என, வழக்கறிஞர் யானை ராஜேந்திரனும், அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகளும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தன.
மனுவில், 'ஆகம விதிகளுக்கு முரணாக, ராமேஸ்வரம் கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
அர்ச்சகர்கள் நியமனத்தில், ஆகம விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என்று, கோரியிருந்தனர்.
இந்த விவகாரத்தில், தமிழக அரசும் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் மற்றும் உட்படாத கோவில்கள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்து, அதுகுறித்த அறிக்கையை மூன்று மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தனர்.
மேலும், ராமேஸ்வரம் கோவிலில் காலியாக இருக்கும் அர்ச்சகர்கள் மற்றும் மணியம் பணியிடங்களை, உரிய ஐதீகத்தை பின்பற்றும் நபர்களை கொண்டே நிரப்ப வேண்டும். ஆகம விதிகள் இல்லாத கோவில்களில், அர்ச்சகர்கள் மற்றும் மணியம் நியமனங்களை, அரசு சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'இந்த வழக்கில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் தொடரும். வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றுகிறோம். மனுதாரர்களுக்கு மேற்கொண்டு ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -