என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்; தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானது பற்றி மோகன்லால் நெகிழ்ச்சி
என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்; தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானது பற்றி மோகன்லால் நெகிழ்ச்சி
ADDED : செப் 21, 2025 04:09 PM

புதுடில்லி: 48 ஆண்டுகால திரைத்துறை வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை. மிகச் சிறந்த தருணம் என தாதாசாகேப் பால்கே விருது குறித்து நடிகர் மோகன்லால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன் லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது வரும் செப்டம்பர் 23ம் தேதி வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக கொச்சியில் நிருபர்களிடம் மோகன்லால் கூறியதாவது: என்னுடன் பணியாற்றிய பலர் இப்போது இல்லை.
எனது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடுவர் குழுவிற்கும் மத்திய அரசுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 48 ஆண்டுகால திரைத்துறை வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை.
தனிப்பட்டது அல்ல
இது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. மலையாள சினிமாவுக்கு இந்த விருது வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். இது மிகவும் உயர்ந்தது. இது சிறப்பு வாய்ந்தது. நான் இதில் பெருமைப்படுகிறேன்.
மாயாஜாலம்
சினிமாவில் இப்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தால் பல முன்னேற்றங்களை கண்டுள்ளன. சினிமா என்பது மாயாஜாலம். 48 ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்திருப்பது ஒரு வகையான சர்க்கஸ். நான் விருதைப் பெறுகிறேன் என்று கேள்விப்பட்ட போது, அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம். இந்தப் பெருமை என்னை உருவாக்கிய மலையாள திரைத்துறைக்கே சேரும்.
சிறந்த தருணம்
மிகுந்த பெருமை, பணிவு, நன்றியுணர்வு, அன்பு மற்றும் மரியாதையுடன், இந்த சிறந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு மோகன்லால் கூறினார்.