மணப்பெண்ணுக்கு வந்த 'போன் கால்'; முகூர்த்த நேரத்தில் நின்ற திருமணம்
மணப்பெண்ணுக்கு வந்த 'போன் கால்'; முகூர்த்த நேரத்தில் நின்ற திருமணம்
ADDED : மே 24, 2025 01:11 AM

ஹாசன் : கர்நாடகாவில், தாலி கட்டும் நேரத்தில் வந்த காதலனின் போன் அழைப்பை அடுத்து, மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகாவில் வசிப்பவர் வேணுகோபால், 28; அரசு பள்ளி ஆசிரியர். பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பல்லவி, 24; முதுகலை பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்தார்.
இருவருக்கும் ஹாசன் நகரின் ஆதிசுஞ்சனகிரி மண்டபத்தில் நேற்று காலை 8:45 மணிக்கு திருமணம் நடக்கவிருந்தது. விருந்தினர், உற்றார், உறவினர் மண்டபத்தில் திரண்டிருந்தனர்.
மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். தாலி கட்டும் நேரத்தில், மணமகள் பல்லவிக்கு மொபைல் போனில் ஒரு அழைப்பு வந்தது. போனுடன் அறைக்குள் சென்று, கதவை தாழிட்டு கொண்டார். சில நிமிடங்களில் வெளியே வந்த அவர், 'எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை' என்றார்.
இதனால் இரண்டு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பல்லவிக்கு பெற்றோர் புத்திமதி கூறி, திருமணத்துக்கு சம்மதிக்கும்படி மன்றாடினர். ஆனால் அவர், தான் வேறு ஒரு வாலிபரை காதலிப்பதாக கூறி, அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார்.
போலீசார் வந்து பேசியும், மணமகள் மனம் மாறவில்லை. கடுப்பான வேணுகோபாலும், தனக்கு திருமணம் தேவையில்லை என, கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார். இரண்டு குடும்பத்தினரும் மண்டபத்தை காலி செய்து சென்றனர்.
மணமகன் உறவினர் ஒருவர் கூறுகையில், 'திருமணத்துக்கு மணமகனின் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளனர். இதை திரும்ப பெறுவதற்கு போலீசார் வாயிலாக பேச்சு நடக்கிறது' என்றார்.