'நோ பார்க்கிங்' பகுதிகளில் வாகனங்கள் மீண்டும் அமலுக்கு வருகிறது 'டோயிங்'
'நோ பார்க்கிங்' பகுதிகளில் வாகனங்கள் மீண்டும் அமலுக்கு வருகிறது 'டோயிங்'
ADDED : ஜன 11, 2024 11:23 PM
பெங்களூரு: சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் நோக்கில், மீண்டும் டோயிங் வாகனங்களை கொண்டு வர, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பெங்களூரில் சாலைகளில் கண்ட, கண்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், பார்க்கிங் அல்லாத இடங்களில் நிறுத்தும் வாகனங்களை, 'டோயிங்' செய்து கொண்டு சென்ற போக்குவரத்து போலீசார், வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வாகன பயணியரிடம் அபராதம் வசூலித்தனர். இதற்காக, 'டைகர்' என்ற பெயரில், டோயிங் வாகனங்கள் இயங்கின.
டோயிங் வாகனங்களின் போலீசார், விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. டைகர் பொறுப்பில் உள்ள ஏ.எஸ்.ஐ., மைக்கில் தகவல் அறிவிப்பதில்லை. லஞ்சம் வாங்கிக்கொண்டு, வாகனங்கை விட்டு விடுகின்றனர். பார்க்கிங் இடங்களில் நிறுத்தினாலும், வாகனங்களை டோயிங் செய்கின்றனர்.
இதனால் பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. எனவே 2023ல் டோயிங் நடைமுறையை, போக்குவரத்து போலீசார் முழுதுமாக நிறுத்தினர்.
மொபைல் போனில் போட்டோ எடுத்து, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, வாகன பயணியரிடம் அபராதம் வசூலித்தனர். டோயிங் நடைமுறையை நிறுத்திய பின், வாகன பயணியர் சாலைகளில், 'நோ பார்க்கிங்' இடங்களில் நிறுத்துவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார், நோ பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்படும் வாகன சக்கரத்தில், கிளாம்ப் பொருத்தி, அதே இடத்தில் அபராதம் வசூலித்த பின், வாகனத்தை விடுகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைக்கு பின்னரும், வாகன பயணியர், பிரதான சாலைகள், ஜங்ஷன்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதற்கு கடிவாளம் போடும் நோக்கில், மீண்டும் டைகர் வாகனங்களை சாலையில் இறக்க, போக்குவரத்து போலீசார் தயாராகின்றனர்.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
வாகன பயணியர் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் நோக்கில், மீண்டும் டோயிங் நடைமுறையை துவக்க உள்ளோம். இதற்கு முன் டோயிங் வாகனங்கள் வாங்க, டெண்டர் அழைக்கப்பட்டது. இந்த வாகனத்தில் ஒரு ஏ.எஸ்.ஐ.,யை நியமித்தது.
ஆனால் இப்போது அரசே, டோயிங் வாகனம் வாங்கி, ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் வழங்கும். இதற்கு தேவையான ஊழியர்கள் தின கூலி அடிப்படையில் நியமிக்கும். 'நோ பார்க்கிங்' இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மட்டும், டோயிங் செய்யப்படும்.
இரு சக்கர வாகனங்களுக்கு, முதல் முறை 500 ரூபாயும், இரண்டாவது முறை 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே போன்று கனரக வாகனங்களுக்கு 500 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும்.
இதனால், வாகன பயணியருக்கும் பயம் இருக்கும். கண்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தமாட்டார்கள். போக்குவரத்து நெரிசலும் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

