வனவிலங்குகளால் விவசாய நிலம் சேதம்; ரூ.45 லட்சம் இழப்பீடு பெற்ற பெண்
வனவிலங்குகளால் விவசாய நிலம் சேதம்; ரூ.45 லட்சம் இழப்பீடு பெற்ற பெண்
ADDED : செப் 16, 2025 12:23 AM

திருவனந்தபுரம்; வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்துக்கு ஒன்றரை ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு பின் இளம்பெண் 45 லட்ச ரூபாய் இழப்பீடு பெற்றார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் திரிக்காரியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேமோள் பைனாதத் டேவிஸ் 35. புற்றுநோய் பாதிக்கப்பட்ட தனது தாய் மோலியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இப்பகுதியில் காட்டு விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 155 பேர் மறு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு கேட்டு வனத்துறையிடம் விண்ணப்பித்த போது அதை கண்டுகொள்ளவில்லை.
இதை தொடர்ந்து மேமோள் பைனாகத் டேவிஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் வனத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இரட்டை முதுகலை பட்டம் பெற்ற இவர் வழக்கறிஞரை நியமிக்காமல் தானே வாதாடினார். 48 முறை விசாரணையில் ஆஜராகி தனது வாதங்களை தெரிவித்தார்.
கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட ஒன்பது நீதிபதிகள் பல்வேறு கட்டங்களில் இவரது வாதத்தை கேட்டனர். இறுதியில் மேமோள் பைனாதத் டேவிசுக்கு வனத்துறை 45 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.

