ADDED : செப் 06, 2026 03:10 AM

லக்னோ: உ .பி.,யில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு பிப்ரவரி, -மார்ச்சில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இரண்டு முறை முதல்வராக இருந்த யோகி, மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., களத்தில் இறங்கி, தேர்தல் வேலைகளை எப்போதோ தொடங்கிவிட்டன. ஆனால், பா.ஜ., அமைச்சர்கள், யோகி மீது கடுப்பில் உள்ளனர்.
இதற்கு காரணம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான். இந்த அதிகாரிகள், முதல்வர் யோகி சொல்வதைத்தான் கேட்கின்றனர்; துறை அமைச்சர்களை கண்டுகொள்வதே இல்லை என, அமைச்சர்கள் கோபத்தில் உள்ளனர்.
துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், மருத்துவத் துறையின் அமைச்சராக உள்ளார். இவருக்கு தெரியாமல் பல மருத்துவர்களை இடமாற்றம் செய்துள்ளார், இந்த துறையின் மூத்த அதிகாரி. இது குறித்து அந்த அதிகாரிக்கு கண்டன கடிதம் எழுதியுள்ளார் பதக்; ஆனால், அந்த மூத்த அதிகாரியோ கடிதத்தை கண்டுகொள்ளவே இல்லை.
துணை முதல்வர் மட்டுமல்லாமல், பல அமைச்சர்களும் இப்படி அவர்களுடைய துறையின் செயலர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், 'என் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை; அவர்களை மாற்றுங்கள்' என, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகளா, அமைச்சர்களா யாருக்கு ஆதரவு அளிப்பது என, குழப்பத்தில் உள்ளார் யோகி.
இன்னொரு பக்கம், இந்த அமைச்சர்கள் எழுதிய கடிதங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, உ.பி., அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
