ஜூலை 28, 2026 10:56 AM
ஜூலை 28, 2026 10:56 AM

பூமியின் மேற்பரப்பில் உள்ள தரவுகளை தொலைவிலிருந்து சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பயன்பாடுகளுக்காக மாற்றும் தொழில்நுட்பத்தை ரிமோட் சென்சிங் பொறியியல் குறிக்கிறது.
செயற்கைகோள்கள், டிரோன்கள், விமானங்கள் போன்ற கருவிகள் மூலம் படங்கள், வெப்பக் குறிப்புகள் போன்ற தரவுகள் பெறப்படுகின்றன. இந்தத் தரவுகள் விவசாயம், வனவியல், நீர்த்தேக்க மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலம் பற்றிய ஆய்வுகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.
இளநிலை படிப்பு பாடத்திட்டம்
ஜியாலஜி, வளிமண்டல அறிவியல், செயற்கைகோள் தொழில்நுட்பம், ஜியோஇன்பர்மேடிக்ஸ், டிஜிட்டல் இமேஜ் புராசசிங், ஜிஐஎஸ் மற்றும் புள்ளியியல் தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்ட பாடங்கள் அடங்கும். இளநிலை படிப்பில் சேர, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை படிப்பு பாடத்திட்டம்
ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோஇன்பர்மேஷன் தொழில்நுட்பத்தில் முதுநிலை படிப்பில், மேம்பட்ட செயற்கைக்கோள் இமேஜ் பகுப்பாய்வு, மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங், ஸ்பெக்ட்ரல் சிக்னல் புராசசிங், 3டி டெரெயின் மாதிரிகள், வலய அடிப்படையிலான தரவுகள் மற்றும் வலய மேலாண்மை போன்ற பாடங்கள் அடங்கும். இதில், பிராக்டிக்கல் லேப்கள், தொழிற்சாலை பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் அடங்கும்.
முதுநிலை படிப்பில் சேர, மாணவர்கள் பி.இ., / பி.டெக்., - சிவில், ஜியோமாடிக்ஸ், கணினி அல்லது தொடர்புடைய துறைகள் அல்லது பி.எஸ்சி., / எம்.எஸ்சி,,- புவியியல், புவியியல் அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு
இஸ்ரோ, என்.ஆர்.எஸ்.சி., டி.ஆர்.டி.ஓ., இந்திய வனத்துறை, நிலவியல் ஆய்வுத் துறைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மையங்கள் போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம். விவசாயம், நகர திட்டமிடல், சாலைகள், நீர் வள மேலாண்மை மற்றும் புவியியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் நிபுணர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
எதிர்கால வளர்ச்சி
பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர் கண்காணிப்பு, நகர வளர்ச்சி, விவசாய உற்பத்தி கணிப்பு மற்றும் நீர்வள மேலாண்மை போன்ற துறைகளில் இதன் பயன்பாடு விரிவடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பிக் டேட்டா போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்படும் திறன், இத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் ஆதரவால், இத்துறையில் ஆராய்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை விரைவாக விரிவடையும் வாய்ப்பு உள்ளது.
