UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 08:59 AM
புதுச்சேரி :
பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்கப் பள்ளி நிலையில் பதவி உயர்வு மூலம் 27 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் 6 பேர் புதுச்சேரியிலும், 12 பேர் காரைக்காலிலும், 6 பேர் மாகியிலும், 3 பேர் ஏனாமிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கப் பள்ளி நிலையில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக 136 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் 106 பேர் புதுச்சேரியிலும், 30 பேர் காரைக்காலில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், நேரடி நியமன அறிவிப்பின்படி, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பதவிக்கு 180 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 78 பேர் புதுச்சேரியிலும், 98 பேர் காரைக்காலிலும், 2 பேர் மாகியிலும், 2 பேர் ஏனாமிலும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடி நியமனத்தின் மூலம் பயிற்சி பெற்ற பட்டாரி ஆசிரியர் பதவிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் காரைக்காலிலும், 2 பேர் மாகியிலும், 3 பேர் ஏனாமிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி நியமண ஆணை வழங்கும் விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. பள்ளி கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி நியமண ஆணைகளை வழங்கி பேசினர்.
விழாவில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், கல்வி துறை செயலர் ஜவகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இணை இயக்குனர் சிவகாமி நன்றி கூறினார்.