ஸ்டாலின் வேட்பு மனுவில் தகவல்கள் மறைப்பு? வழக்கு தள்ளிவைப்பு
ஸ்டாலின் வேட்பு மனுவில் தகவல்கள் மறைப்பு? வழக்கு தள்ளிவைப்பு
ADDED : ஜூலை 28, 2026 05:28 AM

சென்னை: கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அறக்கட்டளை தகவல்களை மறைத்தது தொடர்பாக, விசாரணை நடத்த கோரிய மனு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட திருஞானசம்பந்தம் என்பவர் தாக்கல் செய்த மனு: சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில், முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் போட்டியிட்டார்.
அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தி.மு.க., அறக்கட்டளை நிர்வாகியாக, தான் இருப்பதையும், அறக்கட்டளை சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடியில் 2.27 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கிய விபரத்தையும் தெரிவிக்கவில்லை.
எனவே, மனுவை பரிசீலித்து, விசாரணை நடத்தவும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தரப்பில், 'வேட்பு மனுவில் அறக்கட்டளை குறித்த விபரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை' என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், 'வேட்பு மனுவில் என்ன தகவல்கள் மறைக்கப்பட்டு உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் எங்கே' என, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், சில ஆவணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
அந்த ஆவணங்கள் தமிழில் இடம் பெற்றிருந்ததால், அவற்றை மொழி பெயர்த்து தாக்கல் செய்ய, மனுதாரருக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
