ADDED : ஆக 28, 2024 04:17 AM

புதுச்சேரி : வில்லியனுார் வரதராஜப்பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் நேற்று நடந்தது.
வில்லியனுாரில் பெருந்தேவித்தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று முன்தினம் (26ம் தேதி) துவங்கியது. இதையொட்டி, சுவாமிக்கு இரவு 10:00 மணிக்கு திருமஞ்சனமும், 12:00 மணிக்கு அவதார உற்சவம் நடந்தது.
தொடர்ந்து, நேற்று (27 ம் தேதி) காலை 8:00 மணிக்கு வெண்ணை தாழி கிருஷ்ணர் வீதியுலாவும், மாலை 6:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 7:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டாக்டர் சந்தானகிருஷ்ணன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
