ADDED : டிச 23, 2025 04:27 AM
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே பாரா கிளைடர் கடலில் விழுந்தது தொடர்பாக, அதன் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
சுற்றுலா பயணிகளுக்காக, புதுச்சேரியில், மெரினா பீச் மற்றும் புதுக்குப்பம் கடற்கரையில் சுற்றுலாத்துறை அனுமதியுடன், பாரா கிளைடர் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுக்குப்பத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சொந்தமான பாரா கிளைடர், கடற்கரை பகுதியல் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 20ம் தேதி, புதுக்குப்பம் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பெண் பயணி ஒருவர், பாரா கிளைடரில் ஏறினார்.
அப்போது, ஓட்டுனர், பாரா கிளைடரை, தரையில் இருந்து மேலே ஏழுப்பிய போது, சில வினாடிக்குள் பறந்து திடீரென கடலில், விழுந்தது. அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள், பாரா கிளைடரில் இருந்து விழுந்த, பெண்ணை மீட்டனர். அதிஷ்டவசமாக, அவருக்கு எந்த காயமும் ஏற்டவில்லை.
இதுகுறித்து, தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் விசாரணை செய்ததில், இயந்திர கோளாறு காரணமாக பாரா கிளைடர் பறக்க முடியாமல் கீழே விழுந்தது தெரியவந்துள்ளது.
அதை ஓட்டிய, கேரளா மாநிலம் கன்னுார் மாவட்டம் திரிபுரா பகுதியை சேர்ந்த தில்லுராஜ், 26, என்பவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
சரியான பயிற்சி பெற்று, ஓட்டுனர்கள் இல்லாமல் இருந்ததால், இந்த பாரா கிளைடர், கடந்த சில மாதங்களாக இயக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
