ADDED : ஜூன் 04, 2025 12:21 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பொதுமக்களுக்கான உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சோம்பட்டில் நடந்தது.
கிராம திட்ட ஊழியர் சக்திவேல் வரவேற்றார். மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி, புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், புகையிலை பழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்தும் பேசினார்.
சுகாதார செவிலியர்கள் பொற்கிலை, சந்தோஷ், சூரிய பிரியா ஆகியோர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் காசநோய், புற்று நோய்களின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
ஏற்பாடுகளை சுகாதார ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர். பெண் சுகாதார மேற்பார்வையாளர் சகாயமேரி புலோரா நன்றி கூறினார்.