/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடை கட்டுமான பணி பூமி பூஜையுடன் நின்ற அவலம்
/
ரேஷன் கடை கட்டுமான பணி பூமி பூஜையுடன் நின்ற அவலம்
ADDED : ஜூன் 22, 2025 10:54 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், திருமுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பழைய காலனி பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இவர்கள் நீண்ட துாரம் நடந்து சென்று, உத்தமநல்லுார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வந்தனர்.
இதையடுத்து, இப்பகுதியில் தனியாக நியாய விலை கடை அமைக்க, குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 12.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக நியாய விலைக் கடை கட்டடம் அமைக்க, 2024- பிப்ரவரியில் பூமி பூஜை நடந்தது.
பூமி பூஜை நடந்து, 18 மாதங்கள் கடந்தும், நியாய விலைக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள், இதுவரை துவக்கப்படவில்லை. இதனால், பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து திருமுக்காடு கிராமத்தினர் கூறியதாவது:
நியாய விலைக் கடை அமைக்க பூமி பூஜை நடந்தது.
இன்னும் நிதி கிடைக்காமல், கட்டுமான பணிகளை துவக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், உரிய பதில் இல்லை. கட்டட பணியை விரைந்து துவக்க, அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்து, பணி அணை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.