ADDED : ஜூன் 01, 2024 12:40 AM

புழல், ஜூன் 1--
சென்னை அண்ணா நகர் கிழக்கு, 'ஐ' பிளாக், 10வது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன். அவரது மனைவி அருணா, 63. அவர், ஆவடி போலீஸ் கமிஷனகரத்தில் அளித்த புகார்:
நான், சென்னை மாதவரம் அடுத்த புத்தகரம், லட்சுமி அம்மன் நகரில், 1,800 சதுர அடி இடத்தை, நவநீதம்மாள் என்பவரிடம் விலைக்கு வாங்கினேன். என் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதால், நான் வாங்கிய இடத்தை சென்று பார்க்க முடியாமல் இருந்தேன்.
இந்த நிலையில், 2022, ஜன., 21ம் தேதி, ஆன்லைன் மூலம், வில்லங்கம் போட்டு பார்த்தேன். அதில், அருணா என்ற என் பெயரில், லோகய்யன் என்பவருக்கு, விற்றது தெரியவந்தது.
ஆனால், நான் யாருக்கும் நிலத்தை விற்கவில்லை. போலி ஆவணம் மூலம், ஆள் மாறாட்டம் செய்து, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விற்றுள்ளனர்.
அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
புகார்படி விசாரித்த போலீசார், புத்தகரம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த இனியன், 34 என்பவரை நேற்று கைது செய்தனர்.