/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 ஆண்டுகளாக போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
/
5 ஆண்டுகளாக போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
ADDED : ஜூன் 08, 2025 12:14 AM
சென்னை, அண்ணாசாலையில் உள்ள 'குளோபல் பிசினஸ் டெக்னாலஜி சர்வீஸ்' என்ற மென்பொருள் நிறுவனத்தில், பிரதாப், 65, என்பவர், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியான இ.பி.எப்.,பின் ஆலோசகராக பணிபுரிந்தார்.
இவர், பிராந்திய தொழிலாளர் வைப்பு நிதி, உதவி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு பண மோசடி செய்துள்ளார்.
இது குறித்து, 2008ல் ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில், செயலாக்க அலுவலராக பணிபுரிந்து வரும் பாண்டியன், 55, என்பவர், மத்திய குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார்.
கடந்த 2012 ஜன., 5ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரதாப் நிபந்தனை முன்ஜாமின் பெற்றார். வழக்கின் புலன் விசாரணையின் இறுதி அறிக்கையானது, சென்னை சிறப்பு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது, 2017 ஜூன் 2ம் தேதி முதல், நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், பிரதாப் தலைமறைவாக இருந்து வந்தார்.
சென்னை சிறப்பு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தால், 2020 ஆக., 7ம் தேதி பிரதாப்பிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதாப்பை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திருவான்மியூர், வால்மீகி நகரில் தலைமறைவாக இருந்த பிரதாப்பை, கடந்த 5ம் தேதி போலீசார் கைது
செய்து, எழும்பூர், சென்னை சிறப்பு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிரதாப்பை, கைது செய்த தனிப்படை போலீசாரை, உயர் அதிகாரிகள் பாராட்டினர்.