/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதிகளில் புற்கள் நட திட்டம்
/
வனப்பகுதிகளில் புற்கள் நட திட்டம்
ADDED : ஜூன் 07, 2024 11:26 PM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்ட வனப்பகுதிகளில் அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, வனவிலங்குகளின் உணவு தேவை, நீர்சத்து உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்ய புற்கள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வனத்தில், புற்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருவதால், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் உணவு தேவை அதிகரித்தது.
இதை பூர்த்தி செய்ய, தமிழக அரசின் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு கழக முகமை நிதியுதவியுடன், தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில், சுமார் 520 எக்டேர் அளவுக்கு புல் வகைகளை வளர்க்க முடிவு செய்யபட்டது.
இதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,கோவை வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறை பணியாளர்களுக்கு, மேட்டுப்பாளையத்தில் செயல்படும் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், வனப்பொருட்கள் மற்றும் வன உயிரியல் குழு துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, வனப்பொருட்கள் மற்றும் வன உயிரியல் துறையின் தலைவர் பரணிதரன் கூறியதாவது:
வனப்பகுதிகளுக்கு ஏற்றவாறு, அந்தந்த பகுதிகளில் வளரும் புல் வகைகளை இனம் கண்டறிந்து, எந்த வகைகள் வேகமாக வளரக்கூடியது என தெரிந்து கொண்டு வனப்பகுதிகளில் புற்கள் நடவு செய்யப்பட்டன.
இவ்வாறு புற்களை தேர்வு செய்து நடும் போது புற்கள் வேகமாக வளர்ந்தது. இதன் வாயிலாக அந்நிய களைச்செடிகள், மீண்டும் அந்த இடத்தில் அதிகம் பரவுவது தடுக்கப்பட்டது.
இதன் காரணமாக வனவிலங்குகள் புற்கள் வளர்ந்த இடத்தை தனது வேட்டையாடும் பகுதியாகவும், ஓய்வு எடுக்கும் பகுதியாகவும், புற்களை உண்டும் பயன்படுத்தின.
தாவர உண்ணிகள் விரும்பும் வகையில், அதிக சத்துள்ள, சுவையுள்ள புல் வகைகள் மீண்டும் கோவை மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் நடப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். புற்களில் நீரசத்து அதிகம் என்பதால், வனவிலங்குகளில் தண்ணீர் தேவையை நம்மால் ஓரளவு பூர்த்தி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''காரமடை வனச்சரகத்தில், அத்திக்கடவில் 25 ஏக்கர், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் 25 ஏக்கர் என, 50 ஏக்கர் பரப்பளவில், ரூ.20 லட்சம் மதிப்பில் புற்கள் நடப்பட்டன.
இதனால் வனவிலங்குகளின் உணவு தேவை சற்று குறைந்தது. வனப்பகுதிகளில் புற்களை சாகுபடி செய்தால், வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தடுக்கப்படலாம்,'' என்றனர்.