ADDED : ஜூன் 19, 2025 05:48 AM
வழிப்பறி வாலிபர் கைது
கோவைப்புதுாரை சேர்ந்தவர் மனோஜ், 30. இவர் நேற்று முன்தினம் குனியமுத்துார், மைல்கல் பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர், அவரை தடுத்து நிறுத்தி பணம் கேட்டார். மனோஜ் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, மனோஜிடம் இருந்த ரூ.500 பணத்தை பறித்து சென்றார். மனோஜ் குனியமுத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தவர் மைல்கல், சுகுணாபுரம் கிழக்கு, செம்மொழி நகரை சேர்ந்த சூரியகுமார், 27 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பைக் மோதி பெண் பலி
சுகுணாபுரம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி, 60. கடந்த 16ம் தேதி இரவு, சரஸ்வதி மற்றும் சுகுணாபுரத்தை சேர்ந்த சாந்தி, 58 ஆகியோர் கோவைப்புதுார் பிரிவு பகுதியில் சாலை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு, பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், சரஸ்வதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த சாந்தி, சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அரசு பஸ் மீது கல் வீச்சு
ஒண்டிப்புதுாரில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும், அரசு பஸ் பயணிகளுடன் அத்திப்பாளையம் பிரிவு அருகே, நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது. அப்போது, பஸ்சின் பின் பக்க கண்ணாடியில், கல் பட்டு உடையும் சத்தம் கேட்டது. பயணிகள் பஸ் கண்டக்டரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, கண்ணாடி உடைந்து சிறிய ஜல்லி கற்கள் பஸ்சிற்குள் இருந்தது. கண்டக்டர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.