/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொந்தரவு பண்ணாதீங்க... மீறினால் கடும் நடவடிக்கை
/
தொந்தரவு பண்ணாதீங்க... மீறினால் கடும் நடவடிக்கை
ADDED : பிப் 29, 2024 11:34 PM
மேட்டுப்பாளையம்;'மேட்டுப்பாளையத்தில் உலா வரும் பாகுபலி யானையுடன், யாரும் செல்பி எடுக்க முயற்சிக்கக் கூடாது' என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, குரும்பனுார், ஓடந்துறை, பாலப்பட்டி, ஊமப்பாளையம், சமயபுரம், காந்தையூர், லிங்காபுரம், உழியூர், மொக்கை மேடு என பல்வேறு பகுதிகளில் 'பாகுபலி' என்றழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. ஊர் மக்களை தொந்தரவு செய்யாமலும், பயிர்களுக்கு சேதம் விளைவிக்காமலும் யானை ஊருக்குள் உலா வருவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையம், சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த யானை, அதன் பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
தற்போது மீண்டும் இந்த யானையின் நடமாட்டம் தென்படுகிறது. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இரவு நேரத்தில், அண்மையில் யானை உலா வந்தது. அச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி, சிலர் தொலைவில் நின்று செல்பி எடுக்க முற்பட்டனர். இப்படி செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''பாகுபலி யானையை, இரு குழுக்கள் வாயிலாக, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானையை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.--------------

