/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா
/
இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா
ADDED : ஜன 10, 2024 12:29 PM
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே நிலப்பிரச்னையில் தாக்கபட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சவுளூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்,41. இவரது மனைவி ராஜலஷ்மி, 32. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.  கோவிந்தராஜ் மற்றும் சகோதரர் பிரபாகரன் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததுள்ளது. இதில், கடந்த டிச.,5 அன்று கோவிந்தராஜை, சவுளூரில் உள்ள மாந்தோப்பில் ஒரு கும்பல் தாக்கியது.
தலையில் பலத்த காயமடைந்தவர், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 7 அன்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  கோவிந்தராஜின் மனைவி ராஜலக்ஷ்மி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக  புகார் அளித்தார். சந்தேகத்தின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நேற்று, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து  சடலத்தை உறவினரிடம் ஒப்படைத்த போது, உறவினர்கள் தரப்பில் கோவிந்தராஜ் இறப்பிற்கு காரணமான, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொப்பூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சடலத்தை வாங்கி சென்றனர்.

