ADDED : ஜன 26, 2024 01:40 AM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காரில் சென்ற நிலத்தரகரை வழிமறித்த கும்பல் கடத்திச் சென்று 10 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு ஒரு கி.மீ., தொலைவில் இறக்கி விட்டு தப்பியது.
நத்தம் அடுத்த மணக்காட்டூரை சேர்ந்த நில தரகர் பெரியசாமி 45. இவரிடம் நிலம் வாங்க வேண்டும் என பேசிய பெண் ஒருவர் 'நிலத்தை காட்டுங்கள்' எனக் கூறி நேற்று மாலை 5:30 மணிக்கு வடமதுரையிலிருந்து அவரது காரில் ஏறினார்.
திண்டுக்கல் ரோட்டில் காவேரி மில் ஸ்டாப் அருகில் சென்றபோது அங்கு காத்திருந்த மற்றொரு கார், பின்னால் வந்த மற்றொரு கார், டூவீலரில் வந்த இருவர் என ஒரு கும்பல் காரை வழிமறித்து பெரியசாமியை தாக்கி மற்றொரு காரில் கடத்தி சென்றது. அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்து கொண்டு ஒரு கி.மீ., தொலைவில் உள்ள வேல்வார்க்கோட்டை பிரிவு அருகில் இறக்கிவிட்டு தப்பி சென்றது.

