/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நொய்யல் ஆற்று தண்ணீரில் மீண்டும் உப்பு அதிகரிப்பு
/
நொய்யல் ஆற்று தண்ணீரில் மீண்டும் உப்பு அதிகரிப்பு
ADDED : பிப் 01, 2024 10:55 PM
சென்னிமலை:ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால், ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை, அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, பல ஆண்டுகளாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஆனால், மழைக்காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவு கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
கடந்த மாதம் மழை வெள்ளநீர் அதிகமாக வந்ததால், சாயக்கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீர் நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை, 440 டி.டி.எஸ்., என்ற அளவில் இருந்தது; விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நான்கு நாட்கள் கூட நீடிக்கவில்லை. நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை, 1,470 டி.டி.எஸ்., என உயர்ந்துள்ளது. தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுங்கும் நுரையுமாக செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறியதாவது:
நல்ல தண்ணீராக மழை பெய்தபோது நொய்யல் ஆற்றில் ஐந்து நாட்கள் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஆனால், திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலைகளால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது. உப்பு தன்மையும் அதிகரித்துவிட்டது. இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

