/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
உத்திரமேரூரில் குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
உத்திரமேரூரில் குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
உத்திரமேரூரில் குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 12:23 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு, 40,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, வெங்கச்சேரி செய்யாற்றில் நான்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து, குழாய் வாயிலாக உத்திரமேரூரில் உள்ள ஏழு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி, அதன் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மேலும், உத்திரமேரூர் ஏரியில் திறந்தவெளி கிணறுகள், தாமரை குளக்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அதன் வாயிலாகவும் உத்திரமேரூர் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
எனினும், கோடைக்காலத்தில் இந்த குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால், உத்திரமேரூர் பேரூராட்சியில் கூடுதலாக குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டும் என,பேரூராட்சி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி, உத்திரமேரூர் பேரூராட்சியில் கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்த 2022- - 23ம் ஆண்டு, 'அம்ருத்' திட்டத் தின் கீழ், 20.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
இத்தொகையில், உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி செய்யாற்று படுகையில் கூடுதலாக 4 கிணறுகள் மற்றும் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படுகிறது.
அதேபோல, சோமநாதபுரத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய ஒரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், வேடபாளையத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப் படுகிறது.
உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை, மாதிரியம்மன் கோவில் அருகே 1 லட்சம்லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிஏற்படுத்தப்படுகிறது.
வெங்கச்சேரி செய்யாற்றில் மின்மோட்டார் வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீர், உத்திரமேரூர் சென்றடைய வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து,உத்திரமேரூர் வரை 18 கி.மீ., துாரத்திற்கு நிலத்திற்கடியில் குடிநீர் குழாய் புதைக்கப்படுகிறது.
அதேபோல, உத்திர மேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு களிலும், புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிகள் அனைத்தும் 'டெண்டர்' விடப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. தற்போது 8 மாதங்கள் நிறைவு பெற்றும்,பெரும்பாலான பணிகள் துவக்க நிலையிலேயே உள்ளதாக அப்பகுதியினர்குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் கூறியதாவது:
உத்திரமேரூர் பேரூராட்சியில், 'அம்ருத்' திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. செய்யாற்றில் குடிநீர் கிணறுகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
அதேபோல, வேடபாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சோமநாதபுரம் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் நிறைவடைந்து உள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக, உத்திரமேரூர் பேரூராட்சியின் 18 வார்டு தெருக்களிலும், 80 கி.மீ., துாரத்திற்கு புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது.
பணிகள் அவ்வப்போது அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி இணை இயக்குனர் வாயிலாகவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும்,
இவ்வாறு அவர்கூறினார்.