/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிளாம்பாக்கத்திற்கு திருப்பி விடப்பட்ட மாநகர பஸ்களால் அவதி வழக்கமான சேவை குறைந்து பயணியர் திணறல்
/
கிளாம்பாக்கத்திற்கு திருப்பி விடப்பட்ட மாநகர பஸ்களால் அவதி வழக்கமான சேவை குறைந்து பயணியர் திணறல்
கிளாம்பாக்கத்திற்கு திருப்பி விடப்பட்ட மாநகர பஸ்களால் அவதி வழக்கமான சேவை குறைந்து பயணியர் திணறல்
கிளாம்பாக்கத்திற்கு திருப்பி விடப்பட்ட மாநகர பஸ்களால் அவதி வழக்கமான சேவை குறைந்து பயணியர் திணறல்
ADDED : பிப் 06, 2024 04:26 AM
சென்னை, : கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்துகள் திருப்பிவிடப்பட்டு அதிகமாக இயக்கப்படுவதால், வழக்கமாக செல்லும் பல்வேறு வழித்தடங்களில், பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, புறநகரில் தினமும் 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரின் எல்லை விரிவடைந்து வருவதால், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கோவளம், மாமல்லபுரம், எண்ணுார், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து, மாநகரின் பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் மாநகர பேருந்துகள், கிளாம்பாக்கத்துக்கு நீடிக்கப்பட்டும், திருப்பிவிடப்பட்டும், இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் வழக்கமாக இயக்கப்பட்ட பேருந்துகளின் சேவை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வடபழநி, அண்ணா நகர், அம்பத்துார், ஆவடி, அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை, தி.நகர்,பிராட்வே பணிமனைகளில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு செல்லும் பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
சென்னை, புறநகரில் அனைத்து இடங்களுக்கும் செல்ல, ஒரே பொது போக்குவரத்து வசதி மாநகர பேருந்துகள் தான். ஆனால், இந்த பேருந்துகள் சீரான இயக்கத்தில் இல்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்புக்கு பின் பிராட்வே, தி.நகர், வடபழநி, திருவொற்றியூர் போன்ற முக்கிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், மாநகர பேருந்துகளுக்காக பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணியருக்கு சீரான பேருந்து வசதி கிடைக்க, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகளின் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து வசதி இல்லாமல், பயணியர் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், பயணியர் புகார் குறித்து, பணிமனை அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
அடுத்த சில மாதங்களில் 500க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வரும். இதன்வாயிலாக, சீரான பேருந்து வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோர்ட் முடிவு படி நடவடிக்கை
நாட்டிலே தலைசிறந்ததாக அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, அனைத்து வகை பேருந்துகளை இயக்கினால் மட்டுமே, பயணியருக்கு சிரமம் இருக்காது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்குவது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இரு தரப்பு நடத்திய பேச்சு, அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுதும், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களிலும் காலியாக உள்ள ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது. விரைவில், அவர்களுக்கு பணி வழங்கப்படும்.
சிவசங்கர்,
போக்குவரத்து துறை அமைச்சர்
ஆம்னி பஸ்கள் எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான வசதிகள் போதிய அளவில் இல்லை. அவற்றை ஏற்படுத்தும் வரை, கோயம்பேடில் இருந்து புறப்பட்டு, சென்னை மாநகரின் ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, கிளாம்பாக்கம் செல்ல அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அப்போது தான், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணியர், அவர்களின் இருப்பிடங்களில் இருந்து தடையின்றி செல்ல முடியும். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறோம்.
- அன்பழகன்
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர்