ADDED : ஜன 26, 2024 12:42 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழி நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது, ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி மற்றும் பிரதான கடவுப்பாதைகளின் நடுவே, மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இலுப்பப்பட்டு பகுதியில் இருந்து, ராஜகுளம் மார்க்கமாக இருக்கும், தேசிய நெடுஞ்சாலை ஓரம், மழைநீர் வடி கால்வாய் மீது போடப்பட்ட சிமென்ட் கான்கிரீட் கால்வாய் உடைந்துள்ளது. இரும்புக்கம்பி எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது.
இதனால், வேலுார், காஞ்சிபுரம், ஆகிய மார்க்கங்களில் இருந்து, சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சேதமடைந்த மழைநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.
எனவே, இலுப்பப்பட்டு- - ராஜகுளம் இடையே, சாலை ஓரம் சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எங்கெங்கு உடைந்துள்ளது என, ஆய்வு செய்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

