/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துார்வாரி சீரமைக்காத ஏரி பாசன கால்வாய்
/
துார்வாரி சீரமைக்காத ஏரி பாசன கால்வாய்
ADDED : ஜூன் 13, 2025 01:25 AM

சிறுவாக்கம்:சீரமைக்காத ஏரி பாசன கால்வாயை விவசாயிகளே துார்வாரி பராமரித்து கொள்ள வேண்டும் என, நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால், 980 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்கு செல்லும் 3 கி.மீ., துார போக்கு கால்வாய் கரையின் இருபுறமும் புற்கள் வளர்ந்து, கால்வாய் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் ஏரியில் தண்ணீர் நிரம்பினால்,பாசனத்திற்கு செல்லும் போது வயல்கள் மீது, பாய்ந்தோடும் அபாயம் உள்ளது.
எனவே, மழைக்காலம் துவங்குவதற்கு முன் பாசனக் கால்வாய்களை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதகு, கரை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். பாசன கால்வாய்கள் துார்வாருவதற்கு அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்யாது.
ஆயக்காட்டுதாரர்கள் என அழைக்கப்படும் விவசாயிகளே துார் வாரி பராமரித்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.