/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரி கலங்கலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
ஏரி கலங்கலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 02, 2025 01:21 AM

உத்திரமேரூர்:ஒழையூர் ஏரி கலங்கலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், ஒழையூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 200 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி, 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரி அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. மழைநேரங்களில் ஏரி முழுதுமாக நிரம்பும்போது, உபரிநீர் வெளியேற கலங்கல் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
தற்போது, கலங்கல் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கலங்கல் பகுதியில் மண் துார்ந்து கோரை புற்கள் வளர்ந்து உள்ளன. இதனால், கலங்கல் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய அளவு நீரை சேமிக்க முடியவில்லை.
மேலும், கலங்கல் மீது கருவேலம், வேம்பு உள்ளிட்ட மரங்கள் வளர்கின்றன. கலங்கல் சுவரில் மரத்தின் வேர்கள் உள்ளே ஊடுருவி, கலங்கல் சேதமடையும் சூழல் உள்ளது.
எனவே, கலங்கல் மீது வளர்ந்துள்ள மரங்களை அகற்றி, அதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் முளைத்துள்ள கோரை புற்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.