/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 23, 2025 01:48 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், சாலை சேதமடைந்த மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து, ஏனாத்துார் புறவழி சாலையாக, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் தாமல்வார் தெரு வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், சர்ச் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து பள்ளமாகி உள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினர்.
இதையடுத்து, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், மாறாக சாலை சேதமடைந்த மைய பகுதியில் இரும்பு தடுப்பு அமைத்துள்ளனர்.
வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மையப் பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால், வேகமாக வரும் வாகனங்கள், தடுப்பு உள்ள பகுதியில் திடீரென சாலையோரம் ஒதுங்குவதால், பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படுகிறது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கி, சேதமடைந்த சாலையை தார் ஊற்றி முறையாக சீரமைக்கவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இரும்பு தடுப்பை அகற்றவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.