/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள்
/
விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள்
ADDED : ஜூன் 11, 2025 01:50 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு வழங்கும் பிரதமர் கவுரவ ஊக்கத்தொகையை, விவசாயி அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என, இணைய வழியில் பதிவு செய்து, மத்திய அரசு கவுரவ நிதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வருகிறது. விவசாயிகள் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவும், அரசின் திட்டங்கள் விவசாயிகள் அல்லாத நபர்கள் பயனடையக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு விவசாயிக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு வேளாண் அடுக்கம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் சுயவிபரத்தை பதிவேற்றம் செய்யும் பணி, கடந்த மார்ச் முதல் வேளாண் துறை தீவிரப்படுத்தி உள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகிய துறையினர் வாயிலாக அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பொது சேவை மையங்களிலும், இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.
எனவே, விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்கள், பட்டா, ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி இவைகளை கொண்டு, அரசு கள அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொள்ள வேண்டும். ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும்.
தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. எனவே, தனி அடையாளம் எண் பெறாத விவசாயிகள், விரைவாக வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் பெற வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.