ADDED : ஜூலை 29, 2024 06:55 AM
பேரையூர் : ஆடி மாதம் துவங்கிய பின்னர் பேரையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுகள் மந்தமாக உள்ளது.
பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பேரையூர், டி.கல்லுப்பட்டி, மோதகம், சின்ன பூலாம்பட்டி, டி.குன்னத்துார், சந்தையூர், உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் கிரையம், ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், உயில், செட்டில்மென்ட் உள்ளிட்ட பதிவுகளை பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்திலேயே மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஜூலை 17 ல் ஆடி மாதம் துவங்கியதால் அன்று முதல் பத்திரப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது. இது குறித்து பத்திர எழுத்தர்கள் கூறுகையில், ''ஆடி மாதம் என்பதால் பத்திரங்கள் பதிவு செய்ய மக்கள் தயக்கம் காட்டுவர். இதனால் ஆடி மாதம் முழுவதும் பத்திரப்பதிவு மிகவும் மந்தமாக இருக்கும். வழக்கமாக முகூர்த்த நாட்களில் நாள் ஒன்றுக்கு 50 பத்திரங்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆடி மாதத்தில் தினமும் 10க்கும் குறைவான அளவிலேயே பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக, தெரிவித்தனர்.