/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் மோதல்; சுற்றுலா பயணியர் 'கிலி'
/
யானைகள் மோதல்; சுற்றுலா பயணியர் 'கிலி'
ADDED : ஜூன் 09, 2025 12:45 AM

கூடலூர்; முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் மோதி கொண்ட சம்பவத்தால் சுற்றுலா பயணியர் பீதி அடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தெப்பக்காடு, -மசினகுடி சாலையோரங்களில் வனவிலங்குகள் அதிக அளவில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. காட்டு யானை, காட்டெருமைகள் தாக்கும் அபாயம் இருப்பதால் அவ்வழியாக வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணியர் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்ய கூடாதென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும், சுற்றுலா பயணிகள் சிலர் யானைகள் அருகே வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்துவதால் ஆக்ரோஷமடையும் யானைகள் வாகனங்களை துரத்துகிறது.
நேற்று முன்தினம், மாலை, கார்குடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு ஆண் யானைகள், ஆக்ரோஷத்துடன் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் சூழலில் காணப்பட்டது. பீதியடைந்த வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணியர் வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தினர். அதில் ஒரு யானை அக்ரோஷமடைந்து, மற்றொரு யானையை தாக்க முயன்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் போக்குவரத்து சீரமைத்து, யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.