பருவ மழை பொய்த்ததால் நீலகிரி அணைகளில்... நீர்மட்டம் சரிவு! மின் உற்பத்தி, விவசாய பணிகள் பாதிக்கும் அபாயம்
பருவ மழை பொய்த்ததால் நீலகிரி அணைகளில்... நீர்மட்டம் சரிவு! மின் உற்பத்தி, விவசாய பணிகள் பாதிக்கும் அபாயம்
UPDATED : ஜூன் 16, 2026 05:45 PM
ADDED : ஜூன் 16, 2026 05:21 PM

ஊட்டி: நீலகிரியில் பருவ மழை பொய்த்ததால், அணைகளில் தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து, மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், மலை காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா; பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 'குந்தா, கெத்தை,பரளி, பில்லுார், காட்டுகுப்பை, சிங்காரா, மாயார்,' உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் மற்றும் 13 அணைகள் உள்ளன. இவற்றில், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது.
பொய்த கோடை மழை இந்நிலையில், நடப்பாண்டில் ஜன., மாதம் நிலவரப்படி, அணைகளில், 70 சதவீதம் தண்ணீர் இருப்பில் இருந்தது. இருப்பில் இருந்த தண்ணீர் கூட்டு குடிநீர் திட்டம், மின் உற்பத்திக்கு அவ்வப்போது பயன்படுத்தியதால், அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைய துவங்கியது. பிப்., மாதம் நிலவரப்படி, அணைகளில், 55 சதவீதம் தண்ணீர் இருப்பில் இருந்தது. ஜன., மாதம் முதல் மே மாதம் வரை கோடை மழை சராசரி அளவு, 10 செ.மீ., மட்டுமே பதிவாகி உள்ளது.
கோடை மழை பொய்து, அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீர் தொடர்ந்து மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால், ஜூன் மாதம் இரண்டாவது வாரம் நிலவரப்படி, அணைகளில், 30 சதவீதம் தண்ணீர் இருப்பில் இருந்தது. தற்போது, தென்மேற்கு பருவ மழையும் இதுவரை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின்வாரியம் திணறி வருகிறது.
விவசாய பணிகள் பாதிப்பு மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,' மழை இல்லாததால், அவலாஞ்சி போர்த்தியாடா நீர்பிடிப்பு பகுதிகள் கூட வறண்டு காணப்படுகின்றன. மின் உற்பத்திக்கு தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,' என்றனர்.
நீலகிரியில் மூன்றாம் போக விவசாய பணி, ஏப்., மே மாதங்களில் தொடங்கி ஆக., -செப்., மாதங்களில் அறுவடை பணி நடக்கும். நடப்பாண்டு மழை பொய்த்ததால், விவசாயிகள் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
