/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி வாகனங்கள் ஆய்வு பெற்றோர் வலியுறுத்தல்
/
பள்ளி வாகனங்கள் ஆய்வு பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2025 11:38 PM
தேவிபட்டினம்: பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் பள்ளி வாகனங்கள் முறையாக எப்.சி.,செய்யப்படாத நிலையிலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத நிலையிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களின் நிறம், 10 ஆண்டு அனுபவம் உள்ள ஓட்டுநர்கள், வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி, வாகனத்தில் ஆபத்தான நேரத்தில் மாணவர்கள் விரைவாக வெளியேறும் வகையில் அவசர வழி உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை பள்ளி வாகனங்களில் கடைபிடிக்க அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் பெரும்பாலான தனியார் பள்ளி வாகனங்கள் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காது இயக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் அனுமதி பெறாத வாடகை வாகனங்களிலும் மாணவர்களை அதிகளவில் ஏற்றிச்செல்லும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வு செய்து அரசின் வழிமுறையை பின்பற்றாத பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.