/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கனிம வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., பொருத்த 'கெடு'
/
கனிம வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., பொருத்த 'கெடு'
ADDED : ஜூலை 05, 2025 01:16 AM
சேலம், சேலம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.
மண்டல இணை இயக்குனர் சுமதி தலைமை வகித்து பேசியதாவது:
மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகள், கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் வரும், 31க்குள் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். இல்லை எனில் அத்தகைய வாகனங்களுக்கு, இ - பர்மிட், இ - டிரான்சிட் பாஸ் வழங்கப்படாது.
அதேபோல் அனைத்து குவாரிகள், கிரஷர்கள், சேமிப்பு கிடங்குகளில் கட்டாயம் எடைமேடை நிறுவ வேண்டும். புதிதாக குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோர், https://mimas.tn.gov.in/dist/auth/register என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விதிகளுக்கு முரணாக குவாரி பணிகளை செய்தால் அபராத நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கனிமங்களை வெட்டி எடுத்துச்செல்லும் வாகனங்கள் கைப்பற்றி, மேல் நடவடிக்கை தொடரும்.
சமீபகாலமாக துறை சார்ந்த அதிகாரி கள் என கூறி சிலர், குவாரிகளில் ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. அவ்வாறு வரும் போலி அதிகாரிகள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.