ADDED : ஜூன் 06, 2025 02:41 AM
திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கத்தில் சுடுகாட்டில் சமாதிகளை அகற்றி, வேலியிட்டவர்கள் மீது திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கண்டரமாணிக்கத்தில் உள்ள சமத்துவ சுடுகாட்டை நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இறந்தவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மே28 ல் சுடுகாட்டு நிலத்தை உரிமைகோரி மண் அள்ளும் இயந்திரம் மூலம் 7 சமாதிகளை அகற்றி தனியார் ஒருவர வேலியிட்டுள்ளார்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த புகாரின் பேரில் திருப்புத்துார் தாசில்தார் மாணிக்கவாசகம் ஆய்வு செய்தார். அதில் சுடுகாட்டில் இருந்த வேலியை அகற்ற உத்தரவிட்டார். மேலும் சுடுகாட்டில் இருந்த சமாதிகளை இடித்ததற்கும்,சுடுகாடு இடத்தில் வேலியிட்டதற்கும் தனியார் மீது திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.