/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம்
/
தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம்
தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம்
தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம்
ADDED : ஜூன் 30, 2024 05:16 AM

தேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அடிப்படை வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்ட தலைநகர் தேனியில் செயல்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் இட நெருக்கடியில் சிக்கி தவித்ததால் 2013ல் தேனி-பெரியகுளம் பைபாஸ் ரோட்டில் வனத்துறைக்கு சொந்தமான 7.35 ஏக்கர் பரப்பளவில் தேனி நகராட்சி சார்பில் ரூ.15.25 கோடி செலவில் கர்னல் ஜான் பென்னிகுவிக் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
புதிய பஸ் ஸ்டாண்ட் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்று செயல்பட துவங்கியது. பஸ் ஸ்டாண்டில் 3 பிளாட்பாரங்கள் உள்ளன. முதல் பிளாட்பாரத்தில் மதுரை, போடி, சென்னை, பெங்களூரு பஸ்களும், 2வது பிளாட்பாரத்தில் திண்டுக்கல், திருச்சி, கம்பம், மூணாறு பஸ்கள், 3வது பிளாட்பாரத்தில் டவுன் பஸ்கள், கோவை, திருப்பூர் மற்றும் நீண்ட துார பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 550 அரசு மற்றும் தனியார் பஸ்கள், கேரளா போக்குவரத்து கழக பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு 60 கடைகள், 6 கட்டண கழிப்பறைகள், நான்கு இருசக்கர வாகன காப்பகம் ஆகியவை செயல்படுகின்றன. வியாபாரம், தொழில், சுற்றுலா நிமித்தமாக தினமும் ஏராளமான வெளி மாவட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு பயணிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லை.
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்காக முதலாவது பிளாட்பாரம் மேல்மாடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 3 பிளாட்பாரங்களிலும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் ஒரு ஆண்டு கூட செயல்பட வில்லை. பழுதாகி, பராமரிப்பு இன்றி 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. தாகத்தில் தவிக்கும் பயணிகள் கடைகளில் விலை கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்கி பருகும் அவலம் தொடர்கிறது. சில மாதங்களுக்கு முன் கோடையை சமாளிக்கும் வகையில் நகராட்சி 3 இடங்களில் குடிநீர் வழங்க பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டாலும் அதில் முறையாக தண்ணீர் நிரப்புவதில்லை. மாதம் இருமுறை தண்ணீர் ஊற்றினாலும் அதனை கடைக்காரர்கள் தான் பயன்படுத்தி காலி செய்து விடுகின்றனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பால் அவதி
இங்குள்ள 3 நடைமேடைகளையும் கடை நடத்துவோர் விருப்பம் போல் ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறாக வைத்து வியாபாரம் செய்கின்றனர். பயணிகள் நடந்துசெல்ல முடியாமல் பஸ்கள் வரும் ரோட்டில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. பஸ்சிற்காக காத்திருப்போர் அமர இருக்கை வசதி எதுவும் இல்லை. பெண்கள், முதியோர் பஸ்கள் நிறுத்தப்படும் பஸ் பே பகுதியில் கீழே உட்கார்ந்து செல்கின்றனர். நடைபாதை ஆக்கிமிப்பை நகராட்சி கண்டு கொள்ளாததால் பொதுமக்கள் அவதியடைக்கின்றனர்.
முழுமையடையாத கூரை பணிகள்
இங்கு வரும் பயணிகள் வெயில், மழைக்கு பாதுகாப்பாக ஒதுங்கி நிற்க கூட போதிய வசதி இல்லை. மூன்று பிளாட்பாரங்களிலும் கூரை பிளாஸ்டிக் சீட்டால் அமைக்கப்பட்டிருந்தது. அவை சேதமடைந்தாததால், ஓரு ஆண்டுக்கு முன் முதல் இரு பிளாட்பாரங்களில் உள்ள கூரையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. தனியார் நிறுவனம் மேற்கொண்ட பணி அரைகுறையாக பாதியோடு நிறுத்தப்பட்டது. 3வது பிளாட்பாரத்தில் இதுவரை பணிகள் மேற்கொள்ளவில்லை.
இதனால் டவுன்பஸ்களுக்காக காத்திருப்போர் மழையில் சிரமப்படுகின்றனர்.ஆய்வோடு நின்ற பணிபஸ் ஸ்டாண்டில் 1,2 பிளாட்பாரம் செல்லும் பஸ்கள் மேற்கு நுழைவாயில் வழியாக வந்து வடக்கு வாயில் வழியாக வெளியேறுகின்றன. ஆனால் 3வது பிளாட்பாரத்திற்கு பஸ்கள் வருவதற்கும், வெளியேறுவதற்கும் ஒரே பாதை மட்டும் உள்ளது.
இந்த பிளாட்பாரத்திற்கு வரும் பஸ்கள் ரோட்டிலேயே பயணிகளை இறக்கி விடுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இப் பிரச்னையை தீர்க்க மேற்கு நுழைவாயில் வழியாக 3வது பிளாட்பாரத்திற்கு பஸ்கள் செல்லும் வகையில் பாதை அமைக்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து ஆய்வு செய்தனர். ஆனால் அப்பணிக்கான எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை செய்யவில்லை.
ஏ.டி.எம்., பற்றாக்குறை
பஸ் ஸ்டாண்டில் விரைவு போக்குவரத்து கழக டிக்கெட் பதிவு செய்யும் இடம் அருகே ஒரு தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கி ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டன. அந்த ஏ.டி.எம்.,யில் இருந்து அருகில் கடை நடத்துவோர் மின்சாரம் திருடி பயன்படுத்தியால் பல லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வங்கி ஏ.டி.எம்., பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தனியார் வங்கி ஏ.டி.எம்., மட்டும் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஏ.டி.எம்., உள்ளதே பலருக்கு தெரியாத நிலை உள்ளது.
புகலிடமாகும் பூங்கா
பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள பூங்கா குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளது. அங்கு போதிய வெளிச்சம் இல்லாததால் சமூக விரோதிகள் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். போதிய பராமரிப்பு இன்றி பல இடங்களில் கட்டடங்களில் செடிகள், மரங்கள் வளர்கின்றன.
மதுரை பஸ்கள் நிற்கும் இடத்திற்கு அருகே உள்ள கழிப்பறையில் நீர் கசிவு ஏற்பட்டு, தரையின் கீழ் தளத்தில் அமைந்துள்ள டூவீலர் ஸ்டாண்டில் கசிகிறது. இதானால் சுகாதார கேடு மற்றும் கட்டடம் பாதிக்கும் நிலை உள்ளது.
கழிப்பிடத்தில் கட்டண கொள்ளை
மக்கள்செல்வன், சமூக ஆர்வலர், தேனி:
குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இலவச கழிப்பறைகள் பராமரிக்கப்படுவதில்லை. கட்டண கழிப்பறைகளில் கட்டண விபரம் இல்லை. விருப்பம் போல் ரூ.5,ரூ.10 வசூலிக்கின்றனர். கடைகளில் உணவுப்பொருட்கள் சுகாதாரமின்றி உள்ளது.பயணிகள், குழந்தைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இருக்கைகள் இன்றி அவதி
ஜெயபாண்டி, மாவட்ட குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூ., தேனி.மூணாறு பஸ்கள் நிற்கும் இடத்தில் மட்டும் இருக்கைகள் உள்ளது. அதுவும் சேதமடைந்து உள்ளது. மற்ற இடங்களில் இருக்கைகள் இல்லை. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் முதியவர்கள், கர்பிணிகள், குழந்தைகள் அவதியடைக்கின்றனர். கடைகள் முன் அமரக்கூடாது என கடைக்காரர்கள் விரட்டுவதால் பஸ்கள் வரும் வரை நிற்க வேண்டியுள்ளது. வார இறுதி நாட்கள் விஷேச நாட்களில் டூவீலர்கள் நிறுத்தங்களில் போதிய இட வசதி இல்லாத நிலை உள்ளது. மேலும், கார்களை நிறுத்த பார்க்கிங் வசதி அமைக்க வேண்டும்.
தீர்வு
பஸ் ஸ்டாண்ட் நடைமேடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவச கட்டண கழிப்பறைகள் தினமும் இருவேளை பராமரிக்கவும், கட்டண கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். 3வது பிளாட்பாரத்திற்கு பஸ்கள் மேற்கு நுழைவாயில் வழியாக செல்லவும், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.