/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பஸ் வசதி இன்றி பூதிப்புரம் மக்கள் சிரமம்
/
அரசு பஸ் வசதி இன்றி பூதிப்புரம் மக்கள் சிரமம்
ADDED : ஜூன் 10, 2024 06:15 AM
தேனி, : தேனி பூதிப்புரம் பேரூராட்சி, அதனை சுற்றியுள்ள மஞ்சிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
போடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரம், மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களுக்கு அரசு போதிய அளவில் பஸ்கள் இயக்கவில்லை. தினமும் 3 முறை மட்டும் போடியில் இருந்து தேனி, மறுமார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் மினிபஸ், ஆட்டோக்களை மட்டும் நம்பி பயணிக்கும் நிலை உள்ளது.
இவ்வழியே இயக்கப்படும் அரசு பஸ்கள் பஸ் ஸ்டாப்கள் இல்லாததால் பல இடங்களில் நிறுத்தம் இல்லாமல் பயணிகளை ஏற்றாமல் செல்கின்றன.
அரசு சார்பில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டாலும் பஸ் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் ரூ. 20 கொடுத்து பயணிக்கும் நிலை உள்ளது.
நகர்பகுதிக்கு பணிக்கு வரும் கட்டட தொழிலாளர்கள், கடை ஊழியர்கள், பெண்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலவு செய்யும் நிலை உள்ளது.
பூதிப்புரம் பொது மக்கள் கூறுகையில், 'பல நேரங்களில் ஆட்டோக்களில் பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இப்பகுதிகளில் பஸ் நிழற்குடைகள் அமைக்கப்படாததால், பஸ்கள் நிற்பதில்லை. போடியில் இருந்து பைபாஸ் வழியாக இயக்கும் பஸ்களில் சிலவற்றை இப்பகுதி வழியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் பயனடைவர்', என்றனர்.