/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
/
சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 08, 2024 05:57 AM

திருவள்ளூர், : சென்னை - - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, இலகு, கனரக, வாகனங்கள் என, தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை, ஆறுவழிச் சாலையாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ., நீளச் சாலை 2014-ம் ஆண்டு, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.
மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் திருப்பெரும்புதுார், வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பெரும்புதுார் முதல் வாலாஜா வரையிலான 71 கி.மீ., நீள சாலை விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.
கடந்த 2018-ம் ஆண்டு துவங்கப்பட்ட பணிகள் 2021-ம் ஆண்டிற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன.
இதில், திருமழிசை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள நெடுஞ்சாலையில் சிறு மழைக்கே நீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் நீர் வெளியேற வழியில்லாததால் சாலையோரம் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் கழிவுநீர்
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி, தனியார் தொழிற்சாலை பேருந்து, கனரக மற்றும் இலகுர வாகனம் என, தினமும் 10,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சாணத்தை தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் கொட்டி வருகின்றனர்.
இதேபோல் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் இல்லை.
இதனால் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நெடுஞ்சாலையோரம் குளம்போல் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருவதோடு தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மப்பேடு ஊராட்சியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.