/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவக்கம் கிராமப்புற பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்
/
திருவள்ளூரில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவக்கம் கிராமப்புற பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்
திருவள்ளூரில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவக்கம் கிராமப்புற பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்
திருவள்ளூரில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவக்கம் கிராமப்புற பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்
ADDED : மே 12, 2025 11:06 PM

திருவள்ளூர் : புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், புற்றுநோய் பரிசோதனை செய்யும் இரண்டாம்கட்ட திட்டம், திருவள்ளூரில் நேற்று துவங்கப்பட்டுள்ளது. ''சுகாதார மையங்களில், கிராமப்புற பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்து, சிகிச்சை அளிப்பதற்காக, 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புற்றுநோயை, முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் கண்டறிந்து, முறையான சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். பெரும்பாலும், முற்றிய நிலையிலே கண்டறியப்படும் சூழல் உள்ளது.
அதனால், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வசதி, ஈரோடு, திருப்பத்துார், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.
அடுத்தகட்டமாக, திருவள்ளூர் உள்ளிட்ட, 12 மாவட்டங்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர் சுகாதார நல்வாழ்வு மையத்தில், நேற்று நடந்தது.
அந்த வகையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வாய், கர்ப்பப் பை, கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட புற்றுநோய்களை கண்டறியும் வகையில், இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பங்கேற்று, திட்டத்தை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி, செவிலியர்களுக்கு பூ மற்றும் புத்தகம் கொடுத்து, அமைச்சர்சுப்பரமணியம் வாழ்த்தினார்.
பின், அவர் பேசியதாவது:
இந்தியாவில், வாய் புற்றுநோய் பாதிப்பு சராசரியாக ஒரு லட்சம் ஆண்களில், 25 பேருக்கு உள்ளது. பெண்களை பொறுத்தவரை மார்பக புற்றுநோய் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 10 பேருக்கும், கர்ப்பப்பை புற்றுநோய் 18 பேருக்கும் உள்ளது.
ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் புற்றுநோய் கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் துவக்கப்பட்டு உள்ளது.
மாநில அளவில் ஐந்து இடங்களில், மண்டல வாரியாக ஐந்து இடங்களில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க, 110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தவிர 12 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் புற்றுநோய் கண்டறியும் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. 14 வயதுடைய இளம்பெண்கள், தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 4,000 ரூபாய் செலவாகும்.
அதனால், இளம்பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கும் வகையில், உலகில் முதல்முறையாக தமிழகத்தில் இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில், தமிழகத்தில் இளம்பெண்களுக்கு, புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.
அதேபோல், 46 பகுதிகளில் 40 கோடி ரூபாயில், நடமாடும் புற்றுநோய் கண்டறியும் வாகனம், வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்ய உள்ளது. இத்திட்டமும் விரைவில் துவங்கவுள்ளது.
தமிழகத்தில் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, மொத்தம் 10,999 சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், கிராமப்புற பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இதனால் தமிழகம், புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாறும் என்ற இலக்கை அடையலாம்.
இவ்வாறு அமைச்சர்சுப்பிரமணியன் பேசினார்.

