/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைக்காத பாலம் வாகன ஓட்டிகள் அவதி
/
சீரமைக்காத பாலம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 13, 2025 09:02 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், வெங்கம்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம், பரமேஸ்வர மங்கலம் பகுதிக்கு தார் சாலை வசதி உள்ளது.
இந்த வழியாக பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர்.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், வெங்கம்பேட்டை அருகே சாலையின் குறுக்கே பாயும் ஓடையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கான இணைப்பு சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த மார்க்கத்தில், சோளிங்கரில் இருந்து ஆந்திர மாநிலம், நாயுடுபேட்டையில் உள்ள தொழிற்பேட்டைக்கு கனரக வாகனங்கள் ஏராளமாக பயணிக்கின்றன.
அதே போல், பள்ளிப்பட்டு அருகே செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கும் ஆந்திராவில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு லாரி, டிராக்டர் உள்ளிட்டவை வந்து செல்கின்றன. பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

