/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணி...மந்தம்!:திருவள்ளூர் நகராட்சி ஒப்பந்ததாரருக்கு 'நோட்டீஸ்'
/
கழிவுநீர் சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணி...மந்தம்!:திருவள்ளூர் நகராட்சி ஒப்பந்ததாரருக்கு 'நோட்டீஸ்'
கழிவுநீர் சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணி...மந்தம்!:திருவள்ளூர் நகராட்சி ஒப்பந்ததாரருக்கு 'நோட்டீஸ்'
கழிவுநீர் சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணி...மந்தம்!:திருவள்ளூர் நகராட்சி ஒப்பந்ததாரருக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூலை 27, 2024 02:07 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை விரிவாக்கம் செய்ய 10.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணி ஆணை வழங்கியும், கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணி துவங்காததற்கு காரணம் என்ன, விரைந்து முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப நகராட்சி முடிவு செய்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், கடந்த, 2008ம் ஆண்டு, பாதாள சாக்கடைத் திட்டப்பணி, 55 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. அப்போது, நகரில், 11 ஆயிரத்து 907 கட்டடங்கள் இருந்தன. அதற்கேற்ற வகையில், நகரில், 86.97 கி.மீட்டருக்கு குழாய் பதிக்கப்பட்டது.
தற்போது பணிகள் நிறைவு பெற்று, இதுவரை, 7,000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சேகரிக்க, நகரின் மூன்று இடங்களில், கழிவுநீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர், புட்லுார் ஏரி அருகில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர், வெளியேற்றப்படுகிறது.
தற்போது, இங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர், புட்லுார் ஏரிக்குள் செல்லும் வகையில் உள்ளது. ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், கழிவுநீர் மீண்டும், சுத்திகரிப்பு மையத்தைச் சுற்றிலும் குளம் போல் தேங்கி உள்ளது.
இதன் காரணமாக, தேவா நகர், தேவி மீனாட்சி நகர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மாதக்கணக்கில் தேங்கிய கழிவுநீரால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், வீடுகளுக்குள் பாம்புகள் உள்ளே நுழைந்து விடுகின்றன. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ரூ.10.48 கோடி ஒதுக்கீடு
தற்போது, நகராட்சியில் 15,000 குடியிருப்புகள் உள்ள நிலையில், கழிவுநீர் அதிகமாக வெளியேற்றப்படுகிறது.
இதுகுறித்து, தேவி மீனாட்சி நகர், கோவர்தன் தெருவாசிகள் கூறியதாவது:
நகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுநீர், குழாய் வழியாக, புட்லுார் ஏரி அருகில் உள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதை சுத்திகரிப்பு செய்து, ஏரியில் விடப்படுகிறது. ஆனால், தண்ணீர் முறையாக வெளியேற வழியில்லாமல், சுத்திகரிப்பு மையத்தைச் சுற்றி தேங்கி உள்ளது.
இதையடுத்து, சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவுநீரை, சுத்தமான குடிநீராக மாற்றி, கூவம் ஆற்றில் விடப்படும் வகையில் நவீன திட்டம் தயாரிக்கப்பட்டதாக, நகராட்சி அறிவித்தது.
இதற்காக, 10.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, தேவி மீனாட்சி நகர் பகுதியில், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், கட்டப்பட்டிருந்த 20 வீடுகள் அகற்றப்பட்டன. அதன் பின், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு அருகில், ஜே.சி.பி., வாயிலாக பள்ளம் தோண்டி, சீரமைக்கும் பணி நடந்தது.
இப்பணி தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், தற்போது கழிவுநீருடன், மழைநீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி உள்ளது. மேலும், பள்ளம் தோண்டப்பட்டதால், அருகில் உள்ள மின்கம்பங்கள் உறுதித்தன்மை இழந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி, பகுதிவாசிகளுக்கு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று காய்ச்சல் பரவும் நிலை உள்ளது.
எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்யும் பணியை விரைவில், நகராட்சி நிர்வாகம் துவங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஒப்பந்தம் ரத்து
திருவள்ளூர் நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப, பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஏற்கனவே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை விரிவுபடுத்த, ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர் பணியை வேகமாக முடிக்காமல், காலதாமதம் செய்து வருகிறார். பணியை விரைந்து முடிக்காதது ஏன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை நிறைவு செய்யாவிட்டால், பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்'அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
- உதயமலர் பாண்டியன்,
நகராட்சி தலைவர், திருவள்ளூர்.