/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டா வழங்குவதை இழுத்தடிக்க கூடாது கண்டிப்பு! ஜமாபந்தி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
/
பட்டா வழங்குவதை இழுத்தடிக்க கூடாது கண்டிப்பு! ஜமாபந்தி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பட்டா வழங்குவதை இழுத்தடிக்க கூடாது கண்டிப்பு! ஜமாபந்தி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பட்டா வழங்குவதை இழுத்தடிக்க கூடாது கண்டிப்பு! ஜமாபந்தி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 08, 2024 06:04 AM

''ஜமாபந்தியில் பெறப்படும் பட்டா தொடர்பான மனுக்களில் சாத்திய கூறுகளை கண்டறிந்து, மக்களுக்கு அதிக அளவில் பட்டா வழங்க வேண்டும்,'' என, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவு பிறப்பித்தார்.
ஜமாபந்தி எனப்படும், வருவாய் தீர்வாயம் தமிழகம் முழுதும் தாலுகா வாரியாக ஆண்டு தோறும், மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டு கிடப்பில் உள்ள நீண்டகால கோரிக்கைகள், சாத்தியக்கூறு அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்படும்.
இந்தாண்டு தமிழகம் உள்பட மாநிலம் முழுதும் லோக்சபா தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்தது. தேர்தல் முடிவுகள் 4ம் தேதி வெளியானது. இதனால், இந்தாண்டிற்கான ஜமாபந்தி நேற்று 7ம் தேதி தமிழகம் முழுதும் உள்ள மாவட்டங்களில், தாலுகா வாரியாக துவங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்பது வட்டங்களிலும், 1,433ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நேற்று துவங்கியது, வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். கலெக்டர் அலுவலக மேலாளர் புகழேந்தி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து 11, 12, 13, 14, 18 மற்றும் 19 ஆகிய நாட்கள், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் ஜமாபந்தியில் கலெக்டர், மக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.
நேற்று கும்மிடிப்பூண்டி வட்டம், மாதர்பாக்கம் உள்வட்டத்திற்கு உட்பட்ட பூதுார், நேமளூர், சிறுவாடா, மாதர்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் மனுக்களுடன் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர். பெரும்பாலான மனுக்கள், பட்டா தொடர்பான மனுக்களாகஇருந்தன.
அவர்களில் பலர், பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்திற்கு வீட்டு மனை பட்டா கோரி, மனு அளித்து வருகிறோம். ஏதாவது ஒரு காரணம் தெரிவித்து அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர். இதனால், பட்டா பெற முடியாமல் தவித்து வருகிறோம்' என கலெக்டரிடம் முறையிட்டனர்.
வருவாய் துறையினரிடம் கலெக்டர் கூறுகையில், பட்டா தொடர்பான மனுக்களில் குறைகளை கண்டறியாமல், சாத்தியக் கூறுகளை கண்டறிந்து, தீர்வு காண வேண்டும். இம்முறை ஜமாபந்தியில், அதிக அளவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., கற்பகம் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முதல் நாளான நேற்று, திருவள்ளூர், தலக்காஞ்சேரி, பெரும்பாக்கம், காக்களூர், ஈக்காடு உள்ளிட்ட 9 குறுவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், 60க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திருவள்ளூர் தனித்துணை கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார். தாசில்தார் மதன் முன்னிலை வகித்தார்.
இதில் ஊத்துக்கோட்டை பிர்கா, ஊத்துக்கோட்டை, தாமரைக்குப்பம், தாராட்சி, செஞ்சியகரம், பேரண்டூர், பனப்பாக்கம், தொளவேடு, சென்னங்காரணி, தண்டலம், தும்பாக்கம், பருத்திமேனிக்குப்பம், காக்கவாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 69 மனுக்கள் வழங்கினர்.
இதில், 9 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 60 மனுக்கள் ஏற்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு தாலுகாவில் நேற்று துவங்கிய ஜமாபந்திக்கு, மாவட்ட தனி துணை ஆட்சியர் வி. கணேஷ் தலைமை வகித்தார். பள்ளிப்பட்டு குறுவட்டத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு, பெருமாநல்லுார், குமாரராஜபேட்டை, வெளிகரம் உள்ளிட்ட கிராமத்தினர் மனுக்களை அளித்தனர். நேற்று மொத்தம் , 55 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மூன்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 52 மனுக்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
இதே போல், ஆர்.கே.பேட்டை தாலுகாவில் நேற்று துவங்கிய ஜமாபந்திக்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அ.செல்வமதி தலைமை வகித்தார். இதில், மொத்தம், 40 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 2 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 38 மனுக்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
பொன்னேரி: பொன்னேரியில் நேற்று, சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது. 26ம் தேதிவரை, குறுவட்டங்கள் வாரியாக, பொதுமக்களிடம் இருந்து பட்டா, குடும்ப அட்டை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட உள்ளன.
நேற்று சோழவரம் குறுவட்டத்திற்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டா, பட்டா பெயர் மாற்றம் கேட்டு, 19 மனுக்கள், வீட்டுமனை பட்டா கேட்டு, 39 மனுக்கள், குடும்ப அட்டை கேட்டு ஒன்று, பல்வேறு சான்றுகள் கேட்டு, 23 மனுக்கள், குடிநீர், சாலைவசதி, சுடுகாடு வசதிகேட்டு, 6, என மொத்தம், 88 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில், ஏழு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மற்றவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பூந்தமல்லி: பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில், வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நேற்று துவங்கியது.
முதல் நாளான நேற்று, பூந்தமல்லி குறுவட்டத்தில் அடங்கிய பூந்தமல்லி, அக்ரஹாரம், சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், கோபரசநல்லுார், திருவேற்காடு, வீரராகவபுரம், சுந்தரசோழவரம் ஆகிய கிராமங்களுக்கு நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான கண்ணன் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து பட்டா தொடர்பான மனுக்கள், முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.