/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் மட்டம் குறைவால் மீன்பிடி 'ஜோர்' உள்ளூருக்கு ஒதுக்கீடு தேவை
/
நீர் மட்டம் குறைவால் மீன்பிடி 'ஜோர்' உள்ளூருக்கு ஒதுக்கீடு தேவை
நீர் மட்டம் குறைவால் மீன்பிடி 'ஜோர்' உள்ளூருக்கு ஒதுக்கீடு தேவை
நீர் மட்டம் குறைவால் மீன்பிடி 'ஜோர்' உள்ளூருக்கு ஒதுக்கீடு தேவை
ADDED : ஜூன் 03, 2024 11:58 PM
உடுமலை;நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், அமராவதி அணையில் மீன்பிடி அதிகரித்துள்ளது; அணை நேரடி விற்பனைக்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை அமராவதி அணையில், மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ஆண்டுதோறும், மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு, வளர்க்கப்படுகிறது.
குறிப்பாக, கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா ரக மீன்களே அணைகளில், வளர்ப்புக்கு தேர்வு செய்யப்படுகின்றன. இங்கு பிடிபடும் மீன்களுக்கு, இறைச்சி பிரியர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
வழக்கமாக கோடை காலத்தில், அணை நீர்மட்டம், குறைந்து, மீன் பிடிபடுவது அதிகரிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கோடை காலத்தில் பெய்த மழை காரணமாக, அணை நீர்மட்டம், குறையவில்லை.
மேலும், பலத்த காற்று காரணமாக, பரிசல் இயக்க சிரமம் ஏற்படுவதுடன், விரிக்கும் வலை இழுத்து செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால், மீன்பிடி குறைந்திருந்தது. இந்தாண்டு, பாசனத்துக்கு மற்றும் குடிநீர் தேவைக்காக, அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில், தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, அணை நீர்மட்டம், 90 அடிக்கு, 44.29 அடியாக குறைந்துள்ளது.
நீர்மட்டம் குறைந்துள்ளதால், மீன்பிடி அதிகரித்துள்ளது. அணையில் 20 பரிசல்கள் வாயிலாக, வலை விரித்து மீன்பிடிக்கின்றனர். தற்போது சராசரியாக, 700 கிலோவுக்கும் அதிகமான மீன் கிடைக்கிறது.
ஆனால், அணை அருகிலுள்ள, மீன் வளர்ச்சிக்கழக விற்பனையகத்துக்கு, குறைந்தளவு மீன்களே விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிற பகுதிகளிலுள்ள, விற்பனையகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால், உள்ளூர் மக்கள் வார விடுமுறை நாட்களில், மீன் கிடைக்காமல் ஏமாற்றமடைகின்றனர். எனவே, அமராவதி அணை விற்பனையகத்துக்கு மீன்கள் கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.