ADDED : ஜூன் 01, 2024 11:20 PM
எந்த பட்டத்தில் என்ன பயிர் செய்ய வேண்டும் என்பது குறித்து, விவசாயிகளுக்கு, வேளாண் துறை அறிவுரைவழங்கியுள்ளது.
பல்லடம் மூத்த வேளாண் அலுவலர் வளர்மதி அறிக்கை:
'பட்டம் பார்க்கா பயிர் பாழ்' என்ற பழமொழிக்கு ஏற்ப, பட்டத்துக்கு ஏற்றவாறு பயிரிடவில்லை எனில், போதிய அளவு மகசூல் கிடைக்காது.
பயிருக்கு உகந்த தட்பவெப்ப நிலை, காற்றோட்டம் இருக்கும்போது பயிர்கள் அதிக மகசூல் கொடுக்கும்.
பயிரிடும் பட்டத்தை சம்பா, குறுவை, நவரை, கார், தாளடி, சொர்ணவாரி, முன் சம்பா, பின் சம்பா சித்திரை, ஆடி, கார்த்திகை என பிரிக்கலாம்.
ஏப்., 15 - ஆக., 14; ஜூலை 15 -- ஜன., 14 சம்பா பருவம்; செப்., 15 -- பிப்., 14 பின் சம்பா அல்லது தாளடி; டிச., 15 -- மார்ச் 14 நவரை; ஜூன் 1 - - ஆக., 31 குறுவை; மே 1 -- ஜூலை 14 கார்; அக்., -- நவ., பின் தாளடி என பட்டங்கள் பிரிக்கப்படுகின்றன.
ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில், தொடர்ந்து அதே பயிரை சாகுபடி செய்தால் நிலத்தின் வளம் குறைவதுடன் பயிரின் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும் போது முந்தைய பயிர்களின் கழிவுகளை எருவாக பயன்படுத்துவதால் நோய்கள் எளிதில் தாக்காது.
ஜனவரி: கத்தரி, மிளகாய், தக்காளி, பாகல், பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரை வகைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை, கரும்பு ஆகியவற்றை பயிரிடலாம்.
பிப்ரவரி: கத்தரி, மிளகாய், தக்காளி, பாகல், வெண்டை, சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கன், கோவைக்காய், கீரை வகைகள், அவரை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, சோளம்,, கரும்பு, பருத்தி.
மார்ச்: கத்தரி, தக்காளி, பாகல், வெண்டை, கொத்தவரை, பீர்க்கன், கோவை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, சோளம், பருத்தி.
ஏப்ரல்: செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கன், பாகல், அவரை, கம்பு, சோளம் எள், புடலை.
மே: வெங்காயம், அவரை, எள், சோளம்
ஜூன்: பூசணி, வெண்டை, கீரை வகைகள், கொத்தவரை, தென்னை.
ஜூலை: புடலை, எள், உளுந்து, தென்னை, தட்டைப்பயிறு, துவரை, மொச்சை, பாசிப்பயிறு
ஆகஸ்ட்: முள்ளங்கி, பீர்க்கன், பருத்தி.
செப்டம்பர்: அவரை, மிளகாய், நெல், பருத்தி.
அக்டோபர்: செடி முருங்கை, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, கொண்டை கடலை, நெல், பருத்தி.
நவம்பர்: கொண்டைக்கடலை, நெல், சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளிக்கிழங்கு.
டிசம்பர்: கத்தரி, தக்காளி, மிளகாய், முள்ளங்கி, கொண்டைக்கடலை, நெல் சோளம் தென்னை, வாழை, மரவள்ளி பயிரிடலாம்.
மேலும் விவரங்களுக்கு வேளாண் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.